5777.புரந்தரன்தலை பொதிர் எறிந்திட, புயல் வானில்
பரந்த பல்உரும்ஏற்றுஇனம் வெறித்து உயிர் பதைப்ப,
நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன்
சிரம் துளங்கிட,அரக்கன் வெஞ் சிலையைநாண்
                                 தெறித்தான்.

     புரந்தரன் தலைபொதிர் எறிந்திட - இந்திரன் தலைநடுக்கம்
மேலிடவும்; வானில் பரந்த புயல் பல் உரும் ஏற்று இனம் - ஆகாயத்தில்
பரந்து விளங்கிய மேகங்களில் உள்ள பல பெரிய இடிகளின் கூட்டம்;
வெறித்து உயிர் பதைப்ப - அச்சத்தால் மயக்கம் கொண்டு உயிர் நடுங்கவும்;
நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன் - எப்போதும் உலகம்
முழுவதையும் தாங்கிக் கொண்டுள்ள நீண்ட பாம்பாகிய ஆதிசேடன்; சிரம்
துளங்கிட -
தன் ஆயிரம் தலைகளும் அச்சத்தால் நடுங்கவும்; அரக்கன்
வெஞ்சிலையை நாண் தெறித்தான் -
அரக்கனாகிய இந்திரசித்து, தன்
வில்லின் கொடிய நாணைக் கை விரலால் தெறித்து ஒலி எழுப்பினான்.

     இந்திரசித்துதனது வில்லின் நாணைத் தெறித்த போது, அச்சத்தால்
நடுங்கிய பிறரது நடுக்கம் கூறப்பட்டது. பொதிர் - நடுக்கம்.          (61)