| 5784. | நீண்டவீரனும், நெடுந் தடங் கைகளை நீட்டி, ஈண்டு வெஞ் சரம்எய்தன எய்திடாவண்ணம், மீண்டு போய்விழ வீசி, ஆங்கு அவன் மிடல் தடந் தேர் பூண்ட பேயொடு,சாரதி தரைப்பட, புடைத்தான். |
நீண்டவீரனும் - அவ்வாறு பேருருக் கொண்ட வீரனான அனுமனும்; நெடும் தடம் கைகளை நீட்டி - நீண்ட பெரிய தனது கைகளை எதிரிலே நீளச் செலுத்தி; எய்தன ஈண்டு வெம்சரம் எய்திடா வண்ணம் - (இந்திரசித்தால்) எய்யப் பட்டு விரைந்து வருகின்ற கொடிய அம்புகள் தன்னுடம்பில் படாதபடி; மீண்டு போய் விழ வீசி - திரும்பி, அவன் மேல் போய் விழுமாறு வீசி எறிந்து விட்டு; அங்கு அவன் மிடல் தடம் தேர் பூண் பேயொடு - அங்கே, அவனது வலிமையுள்ள பெரிய தேரில் கட்டிய பேய்களையும்; சாரதி தரைபட புடைத்தான் - தேர்ப்பாகனையும் கீழே விழுந்து இறக்குமாறு அடித்தான். (68) |