இந்திரசித்து அயன்படையை விடுத்தல் 5795. | ஏறு தேர்இலன்; எதிர் நிற்கும் உரன் இலன்; எரியின், சீறு வெஞ் சினம்திருகினன், அந்தரம் திரிவான், வேறு செய்வது ஓர்வினை பிறிது இன்மையின், விரிஞ்சன் மாறு இலாப்பெரும் படைக்கலம் தொடுப்பதே மதித்தான். |
ஏறு தேர் இலன் -(தான்மீண்டும்) ஏறிப் போர்புரிய வேறு தேர் இல்லாதவனாய்; எதிர் நிற்கும் உரன் இலன் - (அனுமன்) எதிரே நின்று போர் செய்யும் வலிமை அற்றவனாய்; எரியின் சீறு வெம் சினம் திருகினன் - தீப் போலச் சீறுகின்ற கொடிய சினத்தால் மாறுபட்டவனாகி; அந்தரம் திரிவான் - வானில் சஞ்சரிக்கும் இந்திரசித்து; வேறு செய்வது ஓர் வினை பிறிது இன்மையின் - செய்வதற்குரியதோர் செயல் வேறு இல்லாமையால்; விரிஞ்சன் மாறு இலாப் பெரும் படைக்கலம் - பிரம்மதேவனுடைய நிகர் இல்லாத பெரிய ஆயுதமாகிய பிரம்மாத்திரத்தை; தொடுப்பதே மதித்தான் - தூண்டுவதாகிய கடுஞ் செயலையே செய்யத் துணிவு கொண்டான். இந்திரசித்து,பிரம்மாத்திரத்தைத் தொடுக்கத் துணிவதன் காரணம் கூறப்பட்டது. விரிஞ்சன் - பிரம்மன். (79) |