5796.

பூவும், பூநிற அயினியும், தீபமும், புகையும்,
தா இல்பாவனையால் கொடுத்து, அருச்சனை
                              சமைத்தான்;
தேவு யாவையும்,உலகமும், திருத்திய தெயவக்
கோவில் நான்முகன் படைக்கலம் தடக் கையில்
                             கொண்டான்.

     தா இல்பாவனையால் - தவறுதல் இல்லாத தியானவகையினால்;
பூவும், பூநிற அயினியும் தீபமும், புகையும் கொடுத்து -
மலர்களையும்
பூநிறம் உள்ள வெண்சோறாகிய நைவேத்தியத்தையும் தீபத்தையும்
தூபத்தையும் சமர்ப்பித்து; அருச்சனை சமைத்தான் - பிரம்மாத்திரத்துக்கு
அருச்சனை செய்து; தேவு யாவையும் உலகமும் திருத்திய - தெய்வங்கள்
எல்லாவற்றையும், உலகங்களையும் ஒழுங்காகப் படைத்த; தெய்வக் கோவில்
நான்முகன் படைக்கலம் -
தெய்வத் தன்மையுள்ள (திருமாலின்
திருநாபிக்கமலமாகிய) சிறந்த இடத்தில் தோன்றி வசிக்கின்ற
பிரம்மதேவனுடைய ஆயுதமான பிரம்மாத்திரத்தை; தடம் கையில்
கொண்டான் -
தனது பெரிய கையில் எடுத்துக் கொண்டான்.

     இந்திரசித்து, பிரம்மாத்திரத்துக்குப் பூசை செய்தது பாவனையால்
(தியானத்தால்) என்பது கூறப்பட்டது. போர்க்களம் ஆகையால், பூசைக்கு
வெளிப் பொருள்கள் இல்லை என்பது கருத்து.                     (80)