5800. | சாய்ந்தமாருதி, சதுமுகன் படை எனும் தன்மை ஆய்ந்து, 'மற்றுஇதன் ஆணையை அவமதித்து அகறல் ஏய்ந்தது அன்று'என எண்ணினன், கண் முகிழ்த்து இருந்தான்; 'ஓய்ந்தது ஆம்இவன் வலி' என, அரக்கன் வந்துற்றான். |
சாய்ந்த மாருதி- கீழேவிழுந்த அனுமன்; சதுமுகன் படை எனும் தன்மை ஆய்ந்து - (தன் மேற் செலுத்தியது) பிரம்மாத்திரம் என்னும் உண்மையை உணர்ந்தறிந்து; இதன் ஆணையை அவமதித்து அகறல் ஏய்ந்தது அன்று என எண்ணினன் - இதன் கட்டளையை இகழ்ந்து இதனைவிட்டு நீங்குதல் தக்கதன்று எனக் கருதியவனாய்; கண் முகிழ்த்து இருந்தான் - கண்ணை மூடிக் கொண்டு அதற்குக் கட்டுப்பட்டவன் போல் இருந்தான்; அரக்கன் 'இவன் வலி ஓய்ந்தது ஆம்' என - அரக்கனாகிய இந்திரசித்து, இவனுடையவலிமை ஒழிந்துவிட்டது என்று எண்ணி; வந்துற்றான் - அனுமன் அருகில் வந்தடைந்தான். வர பலத்தால்பிரம்மாத்திரத்தையும் கடக்கும் ஆற்றல் உள்ளவனாயினும், அனுமன் பிரம்ம தேவனைப் பெருமைப் படுத்த வேண்டும் என்ற பெருந்தகையினால், அதற்குக் கட்டுப்பட்டிருந்தான் என்க. (84) |