5803.

கறுத்தமாசுணம், கனக மா மேனியைக் கட்ட,
அறத்துக்கு ஆங்குஒரு தனித் துணை என நின்ற
                           அனுமன்,
மறத்து, மாருதம்பொருத நாள், வாள் அரா அரசு
புறத்துச் சுற்றியமேரு மால் வரையையும் போன்றான்.

     கறுத்த மாசுணம் -கோபம்கொண்ட அந்தப் பிரம்மாத்திரமாகிய
பாம்பு; கனகமா மேனியை கட்ட - பொன்னிறமான அனுமன் திருமேனியை
வலிதில் இறுக்கிப் பிணிக்க; அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என
நின்ற அனுமன் -
தரும தேவதைக்கு, அந்த இலங்கையில் தான் ஒருவனே
துணைவனாக இருந்த அனுமன்; மறத்து மாருதம் பொருத நாள் வாள் அர
அரசு -
வலிமையோடு காற்று வீசியடித்த காலத்து, ஒளி தங்கிய
அரவுக்கரசனான ஆதிசேடன்; புறத்து சுற்றிய - தன் வெளிப் புறமெல்லாம்
நன்றாகச் சுற்றிக் கொண்டதாய் இருந்த;
 மேருமால் வரையையும்போன்றான்
-
மேரு மலையையும் ஒத்து விளங்கினான்.

     பெரு வடிவமுள்ளஅனுமனைச் சூழ்ந்து இறுக்கிய பாம்புக்கு,
மேருமலையை வளைத்து இறுக்கிய ஆதி சேடன் உவமையாக்கப்பட்டது.
அனுமனுக்கு மேரு மலை உவமை.                              (87)