5809.

'ஓங்கல்அம் பெரு வலி உயிரின் அன்பரை
நீங்கலம்;இன்றொடு நீங்கினாம்; இனி
ஏங்கலம்; இவன்சிரத்து இருந்து அலால் திரு
வாங்கலம்' என்றுஅழும் மாதரார் பலர்.

     ஓங்கல் அம்பெருவலி உயிரின் அன்பரை - 'மலை போன்ற மிக்க
வலிமையும் அழகும் உடைய எமது உயிர் அனைய கணவன்மார்களை;
நீங்கலம் -
இதுவரை நாங்கள் பிரிந்திலோம்; இன்றொடு நீங்கினாம் -
(இவனால்) இன்றொடு நீங்கினவர்களானோம்; இனி ஏங்கலம் - இனி யாம்
ஏக்கமுற்று வருந்தமாட்டோம்; இவன் சிரத்து இருந்து அலால்
திருவாங்கலம் -
இவன் தலையையே பீடமாகக் கொண்டு உட்கார்ந்து
இருத்தலால், எங்கள் திருமாங்கல்யத்தை வாங்கி அகற்ற மாட்டோம்'; என்று
அழும் மாதரார் பலர் -
என்று சொல்லி அழும் அரக்க மகளிர் பலராவர்.

     'தாலி வாங்கும்துக்கச் சடங்கை, குரங்கினைக் கொன்று, அதன்
தலையின் மேல் தான் நடத்துவோம்' என்று அரக்க மகளிர் வீராவேசத்துடன்
கூறினர் என்க.                                           (5)