5819.

'கயிலையின் ஒரு தனிக் கணிச்சி வானவன்,
மயில் இயல்சீதைதன் கற்பின் மாட்சியால்,
எயிலுடைத் திருநகர் சிதைப்ப எய்தினன்,
அயில் எயிற்றுஒரு குரங்கு ஆய்' என்பார், பலர்.

     கயிலையின்ஒருதனி கணிச்சிவானவன் - கயிலைமலை மீது உள்ள
ஒப்பற்ற மழு என்னும் ஆயுதத்தை ஏந்திய சிவபிரானாகிய தேவன்; மயில்
இயல் சீதைதன் கற்பின் மாட்சியால் -
மயில் போன்ற சாயலை உடைய
சீதையின் பெருமையால்; அயில் எயிற்று ஒரு குரங்கு ஆய் - கூரிய
பற்களை உடைய ஒரு குரங்கின் வடிவமாய்; எயில் உடை திருநகர் சிதைப்ப
எய்தினன் -
மதில்களை உடைய இந்த அழகிய இலங்கை நகரை
அழிக்கவந்து அடைந்துள்ளான்; என்பார் பலர் - என்று பல அரக்கர்கள்
கூறுவாராயினர்.                                           (15)