குரங்கைக்கொல்லாது கொணர, இராவணன் பணித்தல். 5832. | எல்லை இல்உவகையால் இவர்ந்த தோளினன், புல்லுற மலர்ந்தகண் குமுதப் பூவினன், 'ஓல்லையின் ஓடி,நீர் உரைத்து, என் ஆணையால், "கொல்லலை தருக"எனக் கூறுவீர்' என்றான். |
எல்லை இல்உவகையால் - அளவற்றமகிழ்ச்சியினால்; இவர்ந்த தோளினன் - பூரித்த தோள்களை உடையவனும்; புல்லுற மலர்ந்தகண் குமுதப் பூவினன் - தழுவுமாறு நன்று மலர்ந்த கண்களாகிய செவ்வாம்பல் மலர்களை உடையவனுமாகிய இராவணன்; நீர் ஒல்லையின் ஓடி - நீங்கள் விரைவாக ஓடிச் சென்று; என் ஆணையால் உரைத்து - எனது கட்டளையாகச் சொல்லி; 'கொல்லலை தருக' என கூறுவீர் என்றான் - 'அந்தக் குரங்கைக் கொல்லாது உயிருடன் கொண்டு இங்குத்தருக' என்று இந்திரசித்துவிடம் சொல்லுவீர் என்று கூறினான், (28) |