5839. | 'கண்டு போயினை, நீள் நெறி காட்டிட, "மண்டு போரில் அரக்கனை மாய்த்து, எனைக் கொண்டு மன்னவன்போம்" எனும் கொள்கையைத் தண்டினாய்-எனக்குஆர் உயிர் தந்த நீ !' |
எனக்கு ஆருயிர் -எனக்குஅரிய உயிரை; தந்த நீ - அளித்த நீ; கண்டு போயினை - (இராமபிரான் ஆணைப்படி) என்னைக் கண்டு சென்றாய் (அதற்கு மேல்); நீள்நெறிகாட்டிட - நீண்ட வழியைக் காட்டிக் கொண்டு நீ முன் வர; மன்னவன் - தலைவனான இராமபிரான் (இங்குவந்து); மண்டு போரில் - அடர்ந்த கடும் போரினிடத்து; அரக்கனை மாய்த்து - இராவணனைக் கொன்று; எனைக் கொண்டு போம் - என்னைச் சிறை மீட்டுக் கொண்டு போவான்; எனும் கொள்கையை - என்று நான் நம்பிக் கொண்டிருந்த கோட்பாட்டை; தண்டினாய் - தவிர்த்து நடந்தாய் (நீக்கிவிட்டாய்). வளர்த்தவனேஅழித்தாற் போல, ஆருயிர் தந்த நீயே, 'இராமபிரான் என்னை மீட்பான்' என்ற என் நம்பிக்கையை அழித்து விட்டாய் என்றபடி. தண்டுதல் - தவிர்ந்து செல்லுதல். 'கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்' (முதுமொழிக்காஞ்சி - தண்டாப்பத்து -3) தண்டாய் - திருப்பிவாங்கிக் கொண்டாய் என்பது பழைய உரை. (35) |