| 5861. | 'தேவர், தானவர், முதலினர், சேவகன் தேவி காவல் கண்டுஇவண் இருந்தவர், கண்புலன் கதுவ, பாவகாரிதன்முடித் தலை பறித்திலென்என்றால், ஏவது யான்இனிமேல் செயும் ஆள்வினை ?' என்றான். |
சேவகன் தேவிகாவல் கண்டு - சிறந்த வீரனானஇராமபிரானுடைய தேவியாகிய சீதா பிராட்டி சிறைக்காவலில் வைக்கப் பெற்றிருக்கக் கண்டும், (மீட்பதற்கு ஆற்றல் இன்றி); இவண் இருந்தவர் - இங்கு வாளாபார்த்துக் கொண்டிருந்தவர்களான; தேவர் தானவர் முதலினர் - தேவர்கள், அசுரர்கள் முதலினோருடைய; கண்புலன் கதுவ - கண்களுக்கு நன்றாகத் தெரியுமாறு; பாவகாரிதன் முடித்தலையான் பறித்திலென் என்றால் - பாவியின் முடிகள் அணிந்த பத்துத் தலைகளையும் நான் இப்போதே பறித்து எறியேன் என்றால்; இனிமேல் செய்யும் ஆள்வினை ஏவது ? - இனிமேல் செய்யும் அடிமைத் தொழில் யாது உள்ளது ? (எதுவும் இல்லை என்றபடி); என்றான் - என்று வினவிக் கொண்டான். 'பிராட்டியைவஞ்சனையால் கவர்ந்து வந்து சிறைவைத்த பாவகாரியின் (இராவணனின்) தலைகளைப் பறித்து எறிவதனினும் மேலாக மெய்யடியான் செய்யத்தக்க உறு தொழிலும் உளதோ ?' என்று அனுமன் தனக்குள் வினவிக் கொண்டான் என்பதாம். (57) |