5863.

'நீண்டவாள் எயிற்று அரக்கனைக் கண்களின் நேரே
காண்டல் வேண்டி,இவ் உயிர் சுமந்து, எதிர் சில
                                      கழறி,
மீண்ட போதுஉண்டு வசைப்பொருள்; வென்றிலேன்
                                    எனினும்,
மாண்டபோதினும், புகழ் அன்றி மற்றும் ஒன்று
                                 உண்டோ ?'+

     நீண்ட வாள்எயிறு அரக்கனை - நீண்ட வாளாயுதம்போன்று கூரிய
பற்களை உடைய இராவணனை; கண்களின் நேரே காண்டல் வேண்டி -
நான் கண்களினால் நேராகப் பார்க்கவிரும்பி; இவ்உயிர் சுமந்து - இந்த என்
உயிரை உடம்பில் வைத்துக் கொண்டிருந்து, எதிர்சில கழறி - (இவனைக்
கண்டபின்) இவன் எதிரிலே சில வார்த்தைகளைச் சொல்லி; மீண்ட போது -
திரும்பிச் சென்ற போதும்; வசை பொருள் உண்டு - எனக்குப் பழியாகிய
நிந்தனையே ஏற்படும்; வென்றிலேன் எனினும் - (அவ்வாறன்றி இவனை
எதிர்த்துப் போர் செய்தால்) இங்கு இவனை வெல்லாவிட்டாலும்; மாண்ட
போதினும் -
(இவன் கையால்) இறந்தாலும்; புகழ் அன்றி மற்றும் ஒன்று
உண்டோ ? -
யான் அடைவது புகழே அல்லாமல், வேறு ஒன்று நிகழுமோ ?
(புகழே உண்டாகும்; இகழ்ச்சி உண்டாகாது என்றபடி)

     'அரக்கனைக்காண்டல் வேண்டி, உயிர் சுமந்து, சில கழறி, மீண்ட
போது வசைப் பொருள்தான் உண்டு; அவ்வாறில்லாமல், இவனை எதிர்த்துப்
போர் புரிந்தால், வென்றாலும் மாண்டாலும் எனக்கு வருவது புகழே !
இகழ்ச்சியில்லை' என்று அனுமன் கருதினான் என்க.                 (59)