5867. | ' "ஏழ் உயர் உலகங்கள் யாவும் இன்புற, பாழி வன்புயங்களோடு அரக்கன் பல் தலை, பூழியில்புரட்டல் என் பூணிப்பு ஆம்" என, ஊழியான்விளம்பிய உரையும் ஒன்று உண்டால். |
ஏழ் உயர்உலகங்கள் யாவும் இன்புற - பூமி முதல் மேலே உயர்ந்துள்ள ஏழு உலக மக்களும் இன்பம் அடையும் படி; அரக்கன் பாழிவன் புயங்களோடு பல்தலை பூழியில் புரட்டல் - இராவணனுடைய பெரிய வலிய தோள்களையும், பலவான பத்துத் தலைகளையும் புழுதியில் புரளும்படி வெட்டித்தள்ளுதல்; என் பூணிப்பு ஆம் - நான் மேற்கொண்ட விரதமாகும்; என - என்று; ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டு - இராமபிரான் சொல்லியுள்ள சபத உரையும் ஒன்று உள்ளது. ஏழ் உயர் உலகம்- பூலோகம். புவர் லோகம், சுவர் லோகம், மக லோகம், சன லோகம், தவலோகம், சத்திய லோகம். பூணிப்பு - விரதம்; ஊழியான் - காலத்திற்குத் தலைவன். (63) |