| 5874. | 'நேமியோ ? குலிசியோ ? நெடுங் கணிச்சியோ ? தாமரைக்கிழவனோ ? தறுகண் பல் தலைப் பூமி தாங்கு ஒருவனோ ?-பொருது முற்றுவான், நாமமும் உருவமும்கரந்து நண்ணினாய் ! |
நேமியோ ? -(அவன்அனுமனை நோக்கி) சக்கராயுதம் தாங்கிய திருமாலோ ?; குலிசியோ ? - வச்சிராயுத பாணியான இந்திரனோ ?; நெடும் கணிச்சியோ ? - நீண்ட சூலாயுதத்தை உடைய சிவபெருமானோ?; தாமரைக் கிழவனோ ? - தாமரை மலரில் தோன்றிய பிரம்ம தேவனோ ?; தறுகண் பல்தலை - அஞ்சாமையும் பல்தலைகளையும் உடைய; பூமிதாங்கு ஒருவனோ ? - பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஒருவனாகிய ஆதிசேடனோ ?; பொருது முற்றுவான் - போர்செய்து இந்த இலங்கையை அழிக்கும் பொருட்டு; நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய் - (மேற்கூறிய ஒருவனாய்) பெயரையும் இயற்கை வடிவத்தையும், மறைத்துக் கொண்டு இங்கு வந்து சேர்ந்தாய். திருமால்முதலியவருள் எவனொருவன் தன் பெயரையும் உருவத்தையும் மறைத்துக் கொண்டு இந்த வடிவமாக வந்து போர் செய்யலாயினன் என்று உட்கொண்டு இராவணன் இவ்வாறு கேட்டான் என்க. (70) |