5875.

'நின்றுஇசைத்து உயிர் கவர் நீலக் காலனோ ?
குன்று இசைத்துஅயில் உற எறிந்த கொற்றனோ ?
தென் திசைக்கிழவனோ ? திசை நி்ன்று ஆட்சியர்
என்றுஇசைக்கின்றவர் யாருள், யாவன் நீ ?

     நின்று இசைத்து -நிலைநின்று தனது பாசத்தால் கட்டி; உயிர்கவர்
நீலக்காலனோ ? -
பிராணிகளின் உயிரைப் பற்றிக் கொள்ளும் கருநிறமுள்ள
காலனோ ?; குன்று இசைத்து அயில் உற எறிந்த கொற்றனோ ? -
கிரௌஞ்சகிரி என்னும் மலையில் பட்டு, தனது வேலாயுதம் உட்புகும்படி
அதனைத் தாக்கிய வெற்றியை உடைய முருகக் கடவுளோ ?; தென் திசை
கிழவனோ ? -
தெற்குத் திசைக்கு உரியவனாகிய யமதர்மராசனோ?; திசை
நின்று ஆட்சியர் -
மற்றத்திக்குகளில் நின்று ஆளுதலை உடையவர்; என்று
இசைக்கின்றவர் யாருள் நீயாவன் ? -
என்று சொல்லப்படுகின்றவர்
அனைவருள்ளும் நீ யார் ?

     காலன், தென்திசைக் கிழவன் என்று வேறாகக் கூறியது, காலன்
என்பவன் யமனது ஆணையைச் செலுத்தும் ஒரு சேவகனே ஆவன் என்பதை
விளக்க வந்தது காலன் - யமகிங்கரர்களின் தலைவன்.               (71)