அனுமன் விடை

5878.

'சொல்லிய அனைவரும் அல்லென்; சொன்ன அப்
புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன்;
அல்லி அம்கமலமே அனைய செங் கண் ஓர்
வில்லிதன் தூதன்யான்; இலங்கை மேயினேன்.

     (யான்) சொல்லியஅனைவரும் - நீ சொன்னயாரும்; அல்லென் -
அல்லன்; சொன்ன - உன்னால் சொல்லப்பட்டவர்களான; அப்புல்லிய
வலியினோர் ஏவல் பூண்டிலேன் -
அந்த அற்ப வலிமையுள்ளவர்களுடைய
கட்டளையை ஏற்று வந்தேனும் அல்லேன்; அல்லி அம் கமலமே அனைய
செங்கண் -
அகவிதழ்கள் நிறைந்த அழகிய செந்தாமரை மலர் போன்ற
கண்களை உடைய; ஓர் வில்லிதன் தூதன் - ஒப்பற்ற ஒரு வில் வீரனது
தூதனாக; யான் இலங்கை மேயினேன் - நான் இலங்காபுரிக்கு வந்தேன்.

     'மும்மூர்த்திகள்முதலியோரது ஆணைகளையும் ஏற்காத யான்,
இராமதூதனாய் இங்கு வந்தேன்' என்று தனது திறத்தையும் இராம பக்தியையும்
வெளியிட்டான் அனுமன். மும் மூர்த்திகளுக்கும் மேம்பட்ட பரம் பொருளே,
இராமபிரானாக அவதாரம் செய்துள்ளது என்பது அனுமனது துணிவு.    (74)