| 5881. | 'தேவரும் பிறரும் அல்லன்; திசைக் களிறு அல்லன்; திக்கின் காவலர் அல்லன்;ஈசன் கைலைஅம்கிரியும் அல்லன்; மூவரும் அல்லன்;மற்றை முனிவரும் அல்லன்; எல்லைப் பூவலயத்தை ஆண்டபுரவலன் புதல்வன் போலாம்; |
தேவரும்பிறரும் அல்லன் - (அந்தவில் வீரன்) தேவர்களும் மற்றை அசுரர்கள் முதலியோரும் அல்லன்; திசைக்களிறு அல்லன் - திக்கயங்களில் ஒன்றும் அல்லன்; திக்கின் காவலர் அல்லன் - திக்பாலகர்களில்ஒருவனும் அல்லன்; ஈசன் கைலை அம் கிரியும் அல்லன் - சிவபிரானுடைய கைலை என்னும் அழகிய மலையும் அல்லன்; மூவரும் அல்லன் - மும்மூர்த்திகளும் அல்லன்; மற்றை முனிவரும் அல்லன் - மற்றைய முனிவர்களும் அல்லன்; எல்லை பூவலயத்தை ஆண்ட - பூமியின் எல்லை எவ்வளவு உண்டோ அவ்வளவையும் அரசாட்சி செய்த; புரவலன் புதல்வன் போலாம் - ஒரு பேரரசனுடைய குமாரனேதான் அவன். அந்தவில்வீரன், உன்னால் வெல்லப்பட்ட தேவர் முதலியோர் அல்லன்; வெல்லப்படாத ஒரு சக்கரவர்த்தியின் புதல்வன் என்றவாது, இராவணனிடம் தோற்றவர்களும், தோற்றவைகளும், அவனை வெல்வதற்கு பழி வாங்குவதற்கு வேற்றுருவம் கொண்டு வந்தவன் அல்லன் இந்தவில் வீரன் என்பது கருத்து. (77) |