இராவணன்,வாலியின் நலன் உசாவலும் அனுமன் விடையும் 5887. | என்றலும்,இலங்கை வேந்தன், எயிற்றினம் எழிலி நாப்பண் மின் திரிந்தென்ன நக்கு, 'வாலி சேய் விடுத்த தூத ! வன் திறல் ஆயவாலி வலியன்கொல் ? அரசின் வாழ்க்கை நன்றுகொல் ?'என்னலோடும், நாயகன் தூதன் நக்கான். |
என்றலும் இலங்கைவேந்தன் - என்று அனுமான்கூறியவுடன், இராவணன்; எயிறு இனம் - தனது பல்வரிசைகள்; எழிலி நாப்பண் மின் திரிந்து என்ன நக்கு - மேகங்களினிடையே மின்னல் உலாவினாற் போலச் சிரித்து, (அனுமனை நோக்கி); வாலி சேய் விடுத்த தூத - வாலிமகன் அனுப்ப வந்த தூதனே !; வன் திறல் ஆயவாலி வலியன் கொல் - மிக்க வலிமை உடையவனான வாலி நலமும் வலிமையும் உடையவனாய் வாழ்கின்றானா ?; அரசின் வாழ்க்கை நன்று கொல் என்னலோடும் - அவனுடைய அரசாட்சி நன்கு நடைபெற்று வருகின்றதா ? என்று கேட்டவுடன்; நாயகன் தூதன் நக்கான் - அனைத்துக்கும் தலைவனான இராமபிரானது தூதனாகிய அனுமான் சிரித்தான். என்றலும்,இலங்கை வேந்தன் நக்கு, வாலி சேய் விடுத்த தூத ! வாலி வலியன் கொல் ? நன்று கொல் ? என்னலலோடும் தூதன் நக்கான் என்க. இராவணனும் நக்கான்; அனுமனும் நக்கான். இரண்டு சிரிப்புக்கும் வேறுபாடு உண்டு. ஒன்று கோபஉணர்வால் வெளிப்பட்டது. மற்றொன்று ஏளனத்தால் வந்தது. (83) |