| 5893. | 'தம்முனைக்கொல்வித்து, அன்னாற் கொன்றவற்கு அன்பு சான்ற உம் இனத்தலைவன் ஏவ, யாது எமக்கு உரைக்கலுற்றது ? எம் முனைத் தூதுவந்தாய் ! இகல் புரி தன்மை என்னை ? நும்மினைக்கொல்லாம்; நெஞ்சம் அஞ்சலை; நுவல்தி' என்றான். |
தம்முனைக்கொல்வித்து - 'தனது தமையனை(இராமனைக் கொண்டு) கொல்லச்செய்து; அன்னான் கொன்றவற்கு அன்பு சான்ற - அந்தத் தமையனைக் கொன்ற இராமனிடம் அன்பு மேற்கொண்ட; உம் இன தலைவன் ஏவ - உங்கள் கூட்டத்துக்குத் தலைவனான சுக்கிரீவன் அனுப்ப; எமக்கு உரைக்கல் உற்றது யாது ? - நீ எனக்குச் சொல்ல வந்தது என்ன ? (மேலும்); எம் முனை தூது வந்தாய் இகல் புரி தன்மை என்னை - எமது முன்னிலையில் தூதனாக வந்த நீ,போர் செய்த காரணம் யாது ? நும்மினைக் கொல்லாம் - தூதுவனாய் வந்த உன்னைக் கொல்லமாட்டோம்; நெஞ்சம் அஞ்சலை நுவல்தி என்றான் - மனம் பயப்படாமல் உண்மையைத் தெளிவாகக் கூறுவாய்' என்று அனுமனை நோக்கி இராவணன் கூறினான். 'தூதனாக வந்தநீ, என்னிடத்தில் நேரில் வந்து தூது மொழி கூறாமல், போர் செய்த காரணம் என்ன ?' என்பது இராவணனது கேள்வி. (89) |