அனுமன் இராவணனைநோக்கி உரைத்தல் கலிவிருத்தம் | 5894. | துணர்த்ததாரவன் சொல்லிய சொற்களைப் புணர்த்துநோக்கி, 'பொது நின்ற நீதியை உணர்த்தினால்,அது உறும்' என, உன்ன அருங் குணத்தினானும்,இனையன கூறினான்: |
உன்ன அருங்குணத்தினானும் - (இத்தன்மையன் என்று) நினைத்தற்கும் அருமையான நற்குணங்களை உடைய அனுமனும்; துணர்த்த தாரவன் - பூங்கொத்துக்களால் ஆகிய மாலையை அணிந்த இராவணன்; சொல்லிய சொற்களை - இவ்வாறு கூறிய வார்த்தைகளை; புணர்த்து நோக்கி - தொகுத்து ஆலோசித்துப் பார்த்து; பொது நின்ற நீதியை - 'எல்லோர்க்கும் பொதுவாக உள்ள நீதி மொழிகளை; உணர்த்தினால் - இப்போது எடுத்துக் கூறினால், அது உறும் என - அது தக்கதாகும்' என்று எண்ணி, இனையன கூறினான் - இந்த வார்த்தைகளைச் சொல்லலானான். இனிவரும் பதினாறுகவிதைகள், அனுமன் கூறிய நீதிகளைத் தெரிவிப்பன. (90) |