| 5900. | ' "திறம்திறம்பிய காமச் செருக்கினால் மறந்து, தம்தம்மதியின் மயங்கினார், இறந்து இறந்து,இழிந்து ஏறுவதே அலால், அறம்திறம்பினர், ஆர் உளர் ஆயினார் ? |
திறம் திறம்பியகாமச் செருக்கினால் - முறைமை தவறிய காமக் களிப்பால் (சிற்றின்ப அகந்தையால்); மறந்து தம்தம் மதியின் மயங்கினார் - நல்வழிகளை மறந்துவிட்டு, தங்கள் தங்கள் அறிவிலே மயக்கம் கொண்டவர்கள்; இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால் - செத்துச் செத்தும் இழிந்தும் ஏறியும் இவ்வாறு மாறி மாறி வருவது அன்றி; அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார் - (அவ்வாறு) அறவழியை மீறி (மாறி) நடந்தவர் யார் நன்னிலையில் நிற்பவராக இருந்தார்கள் ? (ஒருவரும் இல்லை என்றபடி). திறம் திறம்பியகாமச் செருக்கு - தம் மனைவியிடத்து இன்பம் நுகர்தலாகிய முறைமை நீங்கி, பிறன் மனை நயக்கும் காமக் களிப்பு. (96) |