5902.

' "பொருளும், காமமும், என்று இவை போக்கி, வேறு
இருள் உண்டாம்என எண்ணலர்; ஈதலும்,
அருளும், காதலின்தீர்தலும், அல்லது, ஓர்
தெருள் உண்டாம்என எண்ணலர்-சீரியோர்.

     சீரியோர் -அறவொழுக்கங்களில் சிறந்த மேலோர்; பொருளும்
காமமும் என்று இவை போக்கி -
செல்வத்தில் ஆசையும், சிற்றின்பமான
காமத்தில் ஆசையும் ஆகிய இவற்றைத் தவிர்த்து; வேறு இருள் உண்டு
ஆம் என எண்ணலர் -
வேறே இருள் ஒன்று (உலகத்தில்) உள்ளது என்று
நினையார்; ஈதலும், அருளும் - வறியோர்க்குக் கொடுத்தலும், யாரிடத்தும்
கருணை காட்டலும்; காதலின் தீர்தலும் அல்லது - அப்பொருளினிடத்தும்
சிற்றின்பத்தினிடத்தும் பற்று விட்டு நீங்குதலும் ஆகிய இவையே அல்லாமல்;
ஓர் தெருள் உண்டு ஆம் என எண்ணலர் - வேறு ஒரு நல்லறிவு உள்ளது
என்று நினையார்.

     பொருளும் காமமும்இருள்; ஈதலும், அருளும், காதலின் தீர்தலும்
தெளிவு தருவன.                                             (98)