5912.

'குரக்கு வார்த்தையும், மானிடர் கொற்றமும்,
இருக்க; நிற்க;நீ, என்கொல், அடா ! இரும்
புரத்தினுள் தரும்தூது புகுந்தபின்
அரக்கரைக்கொன்றது ? அஃது உரையாய் !'
                               என்றான்.

     குரக்குவார்த்தையும் - குரங்காகியசுக்கிரீவன் கூறிய செய்தியும்;
மானிடர் கொற்றமும் - மனிதர்களான இராம இலக்குவர்களது வெற்றியும்;
இருக்க - ஒரு புறம் இருக்கட்டும்; நிற்க - அவற்றை நீ சொல்வது நிற்கட்டும்;
இரும்புரத்தினுள் - மாநகரமான இலங்கையுள்; தரும் தூது பகுந்த பின் -
என்னிடம் பிறர் அனுப்பிய தூதுவனாக நீ வந்து புகுந்த பிறகு; நீ அரக்கரைக்
கொன்றது -
நீ அரக்கர்களைக் கொன்றது; என் கொல் அஃது உரையாய் -
என்ன காரணத்தினால் ? அந்தக்காரணத்தைச் சொல்வாய்; என்றான் - என்று
(அனுமனை நோக்கி) வினாவினான்.

     அடா: ஏளனஅழைப்பு.                           (108)