இராவணன், அனுமன்வாலில் தீக் கொளுவப் பணித்தல்

அறுசீர்ஆசிரியவிருத்தம் (வேறு) 

5921.

'நல்லது உரைத்தாய், நம்பி ! இவன் நவையே
                செய்தான் ஆனாலும்,
கொல்லல்பழுதே'-'போய் அவரைக் கூறிக்
                கொணர்தி கடிது' என்னா,
'தொல்லை வாலை மூலம் அறச் சுட்டு, நகரைச்
                 சூழ்போக்கி,
எல்லை கடக்கவிடுமின்கள்' என்றான்; நின்றார்
                 இரைத்து எழுந்தார்.

     நம்பி ! நல்லதுஉரைத்தாய் - (வீடணன் கூறியதைக்கேட்ட
இராவணன், அவனை நோக்கி) உத்தமனே ! நீ நல்ல செய்தியை எடுத்துக்
கூறினாய்; இவன் நவையே செய்தான்; ஆனாலும் கொல்லல் பழுதே -
இந்த வானரன், குற்றமே செய்தவன்; ஆனாலும்,(இவனை நாம்) கொல்வது
குற்றமேயாகும்; (என்று கூறி விட்டு, பிறகு அனுமனை நோக்கி); போய் கூறி
அவரை கொணர்தி
கடிது என்னா - 'நீ சென்றுஅவர்களிடம் எனது
நோக்கத்தைச் சொல்லி அவர்களை விரைவில் இங்கு போருக்கு அழைத்து
வருவாய்' என்று சொல்லி, (பிறகு அங்கிருந்த அரக்கர்களை நோக்கி);
தொல்லை வாலை -
இந்தக் குரங்கின் தொல்லைக்கிடமான வாலை; மூலம்
அற சுட்டு -
அடியோடு அழியும்படி நெருப்பைக் கொண்டு எரித்து; நகரைச்
சூழ் போக்கி எல்லை கடக்க விடு மின்கள் என்றான் -
இவனை நம்
நகரைச் சுற்றி இழுத்துச் சென்று, இந்த நகரின் எல்லையைக் கடந்து போம்படி
துரத்திவிடுங்கள் என்று கட்டளையிட்டான்; நின்றார் இரைத்து எழுந்தார் -
அருகே நின்ற அரக்கர்கள் ஆரவாரஞ் செய்து கொண்டு கிளம்பினார்கள்.

     இராவணன்,வீடணனிடமும் அனுமனிடமும் அரக்கர்களிடமும் கூறியது
அனைத்தும் தொகுத்துரைக்கப்பட்டது என்க.                      (117)