அனுமன் மேலெழஅரக்கர் தோள் அற்று விழுதல் 

5937.

முழுவதும் தெரிய நோக்கி, முற்றும் ஊர் முடிவில்
                                 சென்றான்,
'வழு உறு காலம்ஈது' என்று எண்ணினன், வலிதின்
                                 பற்றித்
தழுவினன், இரண்டுநூறாயிரம் புயத் தடக் கை
                                 தாம்போடு
எழு என நால,விண்மேல் எழுந்தனன்; விழுந்த
                                 எல்லாம்.

     முழுவதும் தெரியநோக்கி - அந்த இலங்கை நகர்முழுவதையும்
நன்றாகப் பார்த்துக் கொண்டே; ஊர் முற்றும் முடிவில் சென்றான் - நகர்
முழுவதும் சுற்றிக் கடை எல்லையில் சென்றவனான அனுமான்; வழு உறு
காலம் ஈது என்று எண்ணினன் -
தப்பிப் போதற்குரிய சமயம் இதுதான்
என்று எண்ணி,; வலிதின் பற்றி தழுவினன் - (இரு புறத்துக் கயிறுகளையும்)
வலியப் பிடித்து, (இரு புறத்து விலாவிலும் சேர) இடுக்கிக் கொண்டு; இரு
நூறாயிரம் புயம் தடம் கை தாம் போடு எழு என நால -
இரண்டு
இலட்சம் தோள்களும் பெரிய கைகளும் இரு புறத்துக் கயிற்றுடனே தூண்
போலத் தொங்கும்படி; விண் மேல் எழுந்தனன் - வானின் மேல் உயர்
எழும்பினான்; எல்லாம் விழுந்த - அவ்வரக்கர் கூட்டம் எல்லாம் கீழே
விழுந்தன.

     இலங்கை நகர்முழுவதையும் காணுதல் மூலம், தனது கருத்தை
நிறைவேற்றிக் கொண்ட அனுமன்,திடீரென மேலே எழும்பினான். அப்போது,
அவனைக்கயிற்றொடு பற்றியிருந்த அரக்கர் கூட்டம் கீழே விழுந்தன என்க.
புயத்திற்குஎழு (தூண்) உவமை.                             (133)