அனுமன் தன் வாலைஇலங்கை மீது நீட்டுதல் 

5939.

துன்னலர்புரத்தை முற்றும் சுடு தொழில்
                      தொல்லையோனும்,
பன்னினபொருளும், நாண, 'பாதகர் இருக்கை பற்ற,
மன்னனைவாழ்த்தி, பின்னை வயங்கு எரி
                      மடுப்பென்' என்னா,
பொன் நகர்மீதே, தன் போர் வாலினைப் போக
                      விட்டான்.

     துன்னலர்புரத்தை முற்றும் சுடுதொழில் தொல்லை யோனும் -
பகைவர்களது திரிபுரத்தை முழுவதும் எரித்தலாகிய தொழிலைச் செய்த
முன்னோனான சிவபெருமானும்;
பன்னின பொருளும் நாண-
(அப்பெருமானுக்குத் துணை புரிய வந்தனஎன்று) சொல்லப்படுகின்ற
பொருள்களும் வெட்கப்படும்படி; பாதகர் இருக்கைபற்ற - பாவிகளான
அரக்கர்களது இருப்பிடமாகிய இந்த இலங்கை நகர்முழுவதும் தீப்பற்றி
எரியுமாறு; மன்னனை வாழ்த்தி - (முதலில்)இராமபிரானைத் துதித்து;
பின்னை வயங்கு எரி மடுப்பென என்னா - பிறகு,விளங்கும் நெருப்பை
மூட்டுவேன் என்று எண்ணி; தன் போர் வாலினை -தனது போர்த்திறங்
கொண்டவாலை; பொன் நகர் மீதே போக விட்டான் -பொன்மயமான
இலங்கை நகரின் மேலே செலுத்தினான்.

     சிவபிரான்,துணைவலியோடு (ஆதிசேடன், நாண், திருமால் அம்பு,
பூமித்தேர்) திரிபுரத்தை எரித்தான். அனுமன் எந்தத் துணையும் இன்றி பகைவர்
ஊரை எரித்தான். அதனால், தொல்லையோனுக்கும், பொருளுக்கும் நாணம்
ஏற்பட்டது என்க. துணைவலியின்றி, பகைப்புலத்தை எரிப்பதற்கு அனுமனுக்கு
ஆற்றல் அளித்தது, அவன் இராமபிரானை வாழ்த்தியதாகும். இது அனுமனது
உட்கோள் ஆகும்.                                         (135)