மாதர்கள் வருந்தியவகை 5945. | மணியின்ஆய வயங்கு ஒளி மாளிகை, பிணியின் செஞ்சுடர்க் கற்றை பெருக்கலால், திணி கொள் தீஉற்றது, உற்றில, தேர்கிலார் அணி வளைக் கைநல்லார், அலமந்துளார். |
மணியின் ஆயவயங்கு ஒளி மாளிகை - இரத்தினங்களால் அமைக்கப்பட்ட விளங்குகின்ற ஒளியை உடைய மாளிகைகள்; பிணியின் செஞ்சுடர் கற்றை பெருக்கலால் - தொகுதியாக, செந்நிறமான ஒளியின் திரளை வீசுவதால்; திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார் - நெருக்கங்கொண்ட நெருப்பு பிடித்த இடத்தையும் பிடியாத இடத்தையும் தெரிந்துகொள்ள முடியாதவர்களாய்; அணிவளைக்கை நல்லார் அலமந்து உளார் -அழகிய வளையல்களை அணிந்த மகளிர்கள் இன்னது செய்வதென்றுஅறியாமல் குழப்பமுற்று வருந்தினர். மாளிகை வீசும் மணி ஒளிக்கும், தீ பரவிய செஞ்சுடர் ஒளிக்கும் வேற்றுமை காணாது, மகளிர்கள் மயங்கி வருந்தினர் என்பது கருத்து. (3) |