5955.

கல்லினும்வலிதாம் புகைக் கற்றையால்
எல்லி பெற்றது,இமையவர் நாடு; இயல்
வல்லி கோலிநிவந்தன; மா மணிச்
சில்லியோடும் திரண்டன, தேர் எலாம்.+

     கல்லினும்வலிதாம் புகைக் கற்றையால் - கல்லைக்காட்டிலும்
செறிவுள்ளதான புகைத் தொகுதி பரவிச் சூழ்தலால்; இயல்வல்லி கோலி
நிவந்தன இமையவர் நாடு -
அழகிய கற்பகக் கொடி போன்ற கொடிகள்
சுற்றி உயர்ந்த பொன்மயமான தேவலோகம்; எல்லி பெற்றது - இருள்
அடைந்தது; தேரெலாம் மாமணி சில்லியோடும் திரண்டன - தேர்கள்
எல்லாம் சிறந்த இரத்தினங்களால் இழைக்கப் பெற்ற தம் உருளைகளோடும்
(அத்தீயால் ஒன்றாகச் சேர்ந்து உருகி) ஒரே தொகுதியாக அமைந்தன.

     தேர்கள்பொன்னால் அமைந்தமையால், தீயில் உருகி அவை உறுப்பு
வேறுபாடின்றி ஒன்றாகத் திரண்டன என்க.                       (13)