| 5965. | தளைகொளுத்திய தாவு எரி, தாமணி முளை கொளுத்தி,முகத்திடை மொய்த்த பேர் உளை கொளுத்த,உலந்து உலைவு உற்றன- வளை குளப்பின் மணி நிற வாசியே. |
தளை கொளுத்தியதாவு எரி - (குதிரைகளின்)பின்கால்களைப் பிணைத்திருக்கும் கயிறுகளை எரித்த மேலே தாவி எழும்பிய தீயானது; தாமணி முளை கொளுத்தி - தாமணி என்னும் கழுத்துக் கயிற்றுடன், அக்கயிறு கட்டப்பட்டிருந்த முளைகளையும் எரித்து; முகத்திடை மொய்த்த பேர் உளை கொளுத்த - முகத்தின் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த பெரியபுற மயிர்கள் கொளுத்தப்பட்டு எரிய, (அதனால்); வளைகுளப்பின் மணி நிற வாசி - வளைந்த குளம்பையும் அழகிய நிறத்தையும் உடைய குதிரைகள்; உலந்து உலைவு உற்றன - வாடித்தவித்து அழிந்தன. தளை - விலங்குபோல் காலில் பூட்டப்படும் கயிறு; தாமணி - கழுத்தில் கட்டும் கயி்று; வளைகுளப்பு - வளைந்த கால் குளம்பு; வாசி - குதிரை. குளம்பு என்பது குளப்பு என வலித்தல் விகாரமாக வந்தது. (23) |