5967. | கோசிகத்துகில் உற்ற கொழுங் கனல் தூசின்உத்தரிகத்தொடு சுற்றுறா, வாச மைக் குழல்பற்ற மயங்கினார்- பாசிழைப்பரவைப் படர் அல்குலார். |
பாசு இழை பரவைபடர் அல்குலார் - பசிய பொன்னாபரணங்களையும் கடல் போலப் பரந்த அல்குலையும் உடையவரான அரக்கமகளிர்கள்; கோசிகம் துகில் உற்ற கொழும் கனல் - அவர்கள் இடையில் உடுத்திய கோசிகம் என்னும் பட்டாடையில் பற்றிய வலி மிகுந்த நெருப்பு; உத்தரிக தூசின் ஓடும் சுற்று உறா - மேலாடையுடனே சூழ்ந்து பற்றிக் கொண்டு; வாசம் மை குழல் பற்ற - நறுமணம் மிகுந்த கரு நிறமான கூந்தலில் பற்றிக்கொள்ளவும்; மயங்கினார் - என்ன செய்வது என்று அறியாது திகைத்து அழிந்தார்கள். சில அரக்கியர்,அரையாடை நெருப்பினால் சூழப் பெற்று, மேலாடையிலும் பரவிக் கூந்தலிலும் பற்றவே, திகைத்து மயங்கினர் என்பதாம். கோசிகம் - ஒரு வகைப் பட்டு; இது அரையாடை; உத்தரிகம் - மேலாடை; தூசு - பஞ்சினால் ஆகிய ஆடை. (25) |