கனலுக்குப் பயந்துகடலில் வீழ்தல்

5975.

கரிந்துசிந்திடக் கடுங் கனல் தொடர்ந்து உடல்
                           கதுவ,
உரிந்தமெய்யினர், ஓடினர், நீரிடை ஒளிப்பார்,
விரிந்தகூந்தலும், குஞ்சியும் மிடைதலின், தாமும்
எரிந்து வேகின்றஒத்தன, எறி திரைப் பரவை.

     கரிந்து சிந்திடகடுங்கனல் தொடர்ந்து உடல் கதுவ - கருகி
உதிர்ந்து போகும்படி கொடிய நெருப்பு தொடர்ந்து அரக்கர்களது உடல்களைப்
பற்றலும்; உரிந்த மெய்யினர் ஓடினர் நீரிடை ஒளிப்பார் - (அதனால்)
தோல் உரியப் பெற்ற உடலினராய் ஓடிப் போய் (வெப்பம் தணிவதற்காக)
கடல் நீரில் முழ்கி மறைந்து கொண்டவர்களாயினர்; விரிந்த கூந்தலும்
குஞ்சியும் மிடைதலின் -
(அரக்கரின் பெண்டிர் ஆடவர் என்ற
இருபாலாரின்) விரிந்த தலைமயிரும் (அக்கடலில்) மிகுந்து நிறைந்தமையால்;
எறி திரை பரவை தாமும் எரிந்து வேகின்ற ஒத்தன -
வீசும் அலைகளை
உடைய கடல்களும் தீப்பட்டு, வேகின்றவை போன்றன.

    அரக்கர்களின்தலைமயிர் செம்பட்டையாதலின், கடற்பரப்பில் அவை
நெருங்கித் தோன்றியது. கடல் தீப்பற்றியது போல் காணப்பட்டது என்பது
கற்பனை.                                              (33)