இராவணன் நகர்எரிந்த காரணம் வினவுதல் 5986. | ஆழித்தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி, 'ஏழுக்கு ஏழ் எனஅடுக்கிய உலகங்கள் எரியும் ஊழிக் காலம்வந்து உற்றதோ ? பிறிது வேறு உண்டோ ? பாழித் தீச் சுடவெந்தது என், நகர் ?' எனப் பகர்ந்தான். |
ஆழித் தேரவன் -ஆணைச்சக்கரத்தை உடையவனாய்ப் பெருந்தேர் வீரனான இராவணன்; அரக்கரை அழல் எழ நோக்கி - தன்னுடன் வந்த அரக்கர்களைத் தன்கண்களில் கோபத் தீ பொங்கும் படிப் பார்த்து; ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் - (பதினான்காக) ஒன்றன் மீது ஒன்று என ஏழொடு ஏழாக அடுக்கப் பெற்ற உலகங்கள்; எரியும் ஊழிக்காலம் வந்து உற்றதோ ? பிறிது வேறு உண்டோ ? - எரியும் கற்பாந்த காலம் வந்து சேர்ந்ததோ ? வேறு ஏதேனும் உண்டாயிற்றோ ? பாழி தீ சுட நகர் வெந்ததுஎன் ? - பெரு நெருப்பு எரித்ததால், இந்த இலங்கை நகர் வெந்ததற்குக்காரணம் என்ன; என பகர்ந்தான் - என்று கேட்டான். ஊழிக்காலத்தில்பதினான்கு உலகங்களும் தீயினால் அழியும். அந்த ஊழிக்காலம் வந்து விட்டதா? அல்லது இலங்கை வெந்து அழிவதற்கு வேறு காரணம் உண்டா? என்று இராவணன் அரக்கரைப் பார்த்துக் கேட்டான். ஏழுக்கு ஏழ் - பதினான்கு. பாழி - பெருமை. 'பாழியந் தோளால் வரை எடுத்தான்' - (திருவாய் மொழி 10. 4. 8) (44) |