வானரர் விரும்பியவண்ணம், அனுமன் நடந்த செய்திகளைக் கூறுதல் 6014. | என்றலும்,கரங்கள் கூப்பி எழுந்தனர், இறைஞ்சித் தாழ்ந்து நின்றனர், உவகைபொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர், 'சென்றது முதலா,வந்தது இறுதியாச் செப்பற்பாலை, வன் திறல்உரவோய் !' என்ன, சொல்லுவான் மருத்தின் மைந்தன்: |
என்றலும் -என்று(அனுமன்) கூறியவுடன்; எழுந்தனர் - (வானர வீரர்கள் அனைவரும்) எழுந்து நின்றவர்களாய்; கரங்கள் கூப்பி இறைஞ்சி தாழ்ந்து நின்றனர் - தம் கைகளைக் குவித்து, வணங்கித் தாழ்ந்துநின்று; உவகை பொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர் - மகிழ்ச்சி மேலிட பூரிப்பால் நிமிர்ந்து (ஊக்கம் கொண்ட) மன முடையவர்களாய்; வல் திறல் உரவோய் ! - (அனுமனை நோக்கி) மிக்க வலிமை உடையவனே !; சென்றது முதலா வந்தது இறுதியா செப்பல் பாலை என்ன - நீ இங்கிருந்து போனது முதலாக, இப்பொழுது இங்கு வந்து சேர்ந்தது முடிவாக, (நடந்ததை) இங்குச் சொல்வாயாக என்று கேட்டுக் கொள்ள; மருத்தின் மைந்தன் சொல்லுவான் -வாயு தேவனின் மகனான அனுமன் (பின்வருமாறு) சொல்லுவானாயினான். (8) |