வானர வீரரின்உரைப்படி, அனுமன்
இராமனிடம்முந்திச் செல்லுதல்.

6018.

'ஏத நாள்இறந்த; சால வருந்தினது இருந்த சேனை;
ஆதலால்விரைவின் செல்லல் ஆவதுஅன்று; அளியம்
                                    எம்மைச்
சாதல் தீர்த்துஅளித்த வீர ! தலைமகன் மெலிவு தீரப்
போது நீமுன்னர்' என்றார்; 'நன்று' என அனுமன்
                                    போனான்.

     அளியம் எம்மைசாதல் தீர்த்து அளித்த வீர ! - உம்மால் அன்பு
செய்யத்தக்கவராகிய எங்களை இறந்து போதலினின்றும் நீக்கிக் காத்தருளிய
பெரிய வீரனே !; ஏத நாள் - பிராட்டியைத் தேடி வரும் காரணமாய்க்
குறிப்பிட்ட நாட்கள்; இறந்த - கடந்து போயின; இருந்த சேனை சால
வருந்தினது -
உம் வரவை எதிர் நோக்கி இங்கு தங்கியிருந்த சேனை,
மிகவும் துயரம் மேற் கொண்டது; விரைவின் செல்லல் ஆவது அன்று
ஆதலால் -
வேகமாகச் செல்லும்வலிமை உடையது அல்ல ! ஆகையால்;
தலைமகன் மெலிவு தீர நீ முன்னர் போது என்றார் - தலைவனான
இராமபிரானது துன்பம் நீங்க, நீ முன்னதாக, அப்பெருமானிடம் போவாயாக
என்று வானர வீரர் கூறினார்கள்; நன்று என அனுமன் போனான் -
'நல்லது' என்று சொல்லிவிட்டு இராமபிரான் இருக்கும் இடம் நோக்கி அனுமன்
சென்றான்.

     ஏத நாள் -பிராட்டியைத் தேடி வரும் காரணமாகக் குறிக்கப்பட்ட நாள்;
அது ஒரு மாதத் தவணை; 'ஒரு மதி முற்றுறாத முன் முற்றுதி்ர்' (கம்ப. 4457)
குறிப்பிட்ட நாள் கடந்தமையால், தமது அரசன் சுக்கிரீவன் தண்டிப்பானே
என்பது, சேனையின் வருத்தம். சாதல் தீர்த்து அளித்தல் - சேனை சாகத்
துணிந்தது. 'மாண்டுறுவது நலம் என வலித் தனம்'. (கம்ப. 4658) அனுமன்,
இராமபிரானிடம் விரைவில் செல்ல வேண்டியதைக் காரணத்துடன் வானர
வீரர்கள் கூறியதைத் தெரிவிப்பது இது.                         (12)