சுக்கிரீவனைநோக்கி இராமபிரான் துயருடன் பேசுதல் 6023. | 'குறித்த நாள் இகந்தன குன்ற, தென் திசை வெறிக் கருங்குழலியை நாடல் மேயினார் மறித்து இவண்வந்திலர்; மாண்டுளார்கொலோ ? பிறித்துஅவர்க்கு உற்றுளது என்னை ?- பெற்றியோய் !' |
பெற்றியோய் -நற்பண்புடையவனே !; வெறிகரும் குழலியை தென் திசை நாடல் மேயினார் - நறு மணம் உள்ள கரிய கூந்தலை உடைய சீதையை தெற்குத் திசையில் தேடுதலை மேற்கொண்டு சென்ற அனுமன் முதலிய வானர வீரர்கள்; குறித்த நாள் இகந்தன குன்ற - நாம் குறிப்பிட்டுக் கூறிய தவணை நாட்கள் கடந்தன; நாள் கடந்து தேயவும்; இவண்மறித்து வந்திலர் - இங்கு திரும்பி வந்தாரல்லர்; அவர்க்கு - தேடச் சென்ற அவ்வானர வீரர்க்கு; பிறிது உற்றுளது என்னை ? - வேறு என்ன நேர்ந்துள்ளது ?; மாண்டுளார் கொலோ ? - இறந்து போயினார்களோ ? குறித்தகாலத்துக்குள், தென் திசை சென்றவர்கள் வராததனால்; மாண்டுவிட்டனரோ என்று ஐயமுறுகின்றான் இராமபிரான். 'பிறிது' என்பது எதுகை நோக்கி பிறித்து என நின்றது; செய்யுள் விகாரம். (17) |