6036. | 'கண்ணினும்உளை நீ; தையல் கருத்தினும் உளை நீ; வாயின் எண்ணினும் உளைநீ; கொங்கை இணைக் குவைதன்னின் ஓவாது அண்ணல் வெங்காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறாப் புண்ணினும் உளைநீ; நின்னைப் பிரிந்தமை பொருந்திற்று ஆமோ ? |
நீ, தையல்கண்ணினும் உளை - நீ, பிராட்டியின்கண்களிலும் எப்பொழுதும் நீங்காது இருக்கின்றாய்; கருத்தினும் நீ உளை - அவள் மனத்திலும் நீ தங்கியிருக்கின்றாய்; வாயின் எண்ணினும் நீ உளை - அவள் வாயினின்றும் தோன்றும் ஒவ்வொரு சொற்களிலும் நீ இருக்கின்றாய்; கொங்கை இணை குவை தன்னில் அண்ணல்வெம் காமன் ஓவாது எய்த - இரண்டு தனங்களின் முகட்டிலும், பெருமையும் கொடுமையும் உடைய மன்மதன் இடைவிடாமல் ஏவிய மலரம்புகள் தைத்து ஊடுருவிய ஆறாத புண்களிலும் நீ தங்கியிருக்கின்றாய்; நின்னைப் பிரிந்தமை பொருந்திற்று ஆமோ ? - (ஆதலால்) உன்னைப் பிரிந்திருக்கின்றாள் என்பது பொருத்தமான செய்தி ஆகுமோ ? (ஆகாது) பிராட்டி, மனம்,மொழி, மெய் என்ற கரணங்களாலும் இராமபிரானைப் பிரியாது இருக்கிறாள் என்பது கருத்து. கண்களில் இருத்தல் உரு வெளித் தோற்றம்; வாயின் எண்ணின் இருத்தல் இராமநாமம் கூறுதல். கொங்கை..... புண்ணில் இருத்தல் இராமனைத் தழுவும் பாவனை. (30) |