6038. | 'மண்ணொடும் கொண்டு போனான்-வான் உயர் கற்பினாள்தன் புண்ணிய மேனிதீண்ட அஞ்சுவான், உலகம் பூத்த கண் அகன்கமலத்து அண்ணல், "கருத்திலாள்- தொடுதல் கண்ணின், எண் அருங் கூறாய்மாய்தி" என்றது ஓர் மொழி உண்டு என்பார். |
கண் அகன்கமலத்து உலகம் பூத்த அண்ணல் - இடம் அகன்ற திருமாலின் திரு உந்தித் தாமரை மலரில் தோன்றி உலகத்தைப் படைத்த பிரமதேவன்; கருத்து இலாள் தொடுதல் கண்ணின் - (இராவணனை நோக்கி)விருப்பம் இல்லாத பெண்ணை நீ வலிதாகத் தீண்டுதல் செய்வையானால்; எண்அரும் கூறாய் மாய்தி - நினைப்பதற்கு அரிதான கூறுகளாகப் பிளப்புண்டுஇறப்பாய்; என்றது ஓர் மொழி உண்டு என்பார் - என்று இட்டதாகிய ஒருசாப வார்த்தை உண்டு என்று சொல்வார்கள்; வான் உயர் கற்பினாள் தன்புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான் - (ஆதலால் இராவணன்) மிகச்சிறந்த கற்பு நிலையை உடையவளான பிராட்டியினது பரிசுத்தமானதிருமேனியைத் தீண்டுவதற்கு அச்சம் உற்றவனாய்; மண்ணொடும் கொண்டுபோனான் - நிலத்தோடு எடுத்துக் கொண்டு போனான். பிராட்டி, தூயசாலையில் இருப்பதற்கும், இராவணன் பிராட்டியைத் தீண்டாமைக்கும் காரணம் கூறப்பட்டது. பிரமன் இராவணனுக்குச் சாபம் இட்ட வரலாறு, திரிசடை மூலம் பிராட்டி அறிந்திருந்தாள். அது (கம்ப 5365) பிராட்டியால் அனுமனுக்குத் தெரிவிக்கப்பட்டது. (32) |