| 6039. | 'தீண்டிலன்என்னும் வாய்மை-திசைமுகன் செய்த முட்டை கீண்டிலது;அனந்தன் உச்சி கிழிந்திலது; எழுந்து வேலை மீண்டில;சுடர்கள் யாவும் விழுந்தில; வேதம் செய்கை மாண்டிலது;-என்னும் தன்மை வாய்மையால், உணர்தி மன்னோ ! |
தீண்டிலன்என்னும் வாய்மை - பிராட்டியை இராவணன் தொட்டானில்லை என்ற உண்மையை; திசை முகன் செய்த முட்டை கீண்டிலது -பிரமன்படைத்த உலகம், பிளந்து போகவில்லை; அனந்தன் உச்சி கிழிந்திலது - ஆதிசேடனது தலைகளோடு கூடிய படம் கிழிந்து போகவில்லை; வேலை எழுந்து மீண்டில - கடல்கள் பொங்கி மேல் வந்தனவில்லை; சுடர்கள் யாவும் விழுந்தில - சூரியன் சந்திரன் முதலிய ஒளியுள்ள நட்சத்திரங்கள் யாவும் கீழே விழுந்து அழியவில்லை; வேதம் செய்கை மாண்டிலது - வேதங்களும் அவற்றில் கூறப்பட்டுள்ள ஒழுக்கங்களும் அழிந்தனவல்ல; என்னும் தன்மை வாய்மையால் உணர்தி - என்கின்ற இத்தன்மை மெய்யாயிருத்தலை நோக்கி, (அதனால்) உணர்வாயாக. வாய்மை,வாய்மையால் உணர்தி' என இயையும், இராவணன் பிராட்டியைத் தீண்டிலன் என்னும் வாய்மை கடல்கள் எழுந்து பொங்காமை முதலியவற்றால் அறியக்கிடக்கும். பிராட்டியின் புனிதத் தன்மையால்தான், இயற்கை நிகழ்ச்சிகள் மாறுபடாமல் நிற்கின்றன என்று கூறப்பட்டது. (33) |