6054. | பொடித்தனஉரோமம்; போந்து பொழிந்தன கண்ணீர்; பொங்கித் துடித்தன,மார்பும் தோளும்; தோன்றின வியர்வின் துள்ளி; மடித்தது, மணிவாய்; ஆவி வருவது போவது ஆகித் தடித்தது, மேனி;என்னே, யார் உளர் தன்மை தேர்வார் ? |
உரோமம்பொடித்தன - (இராமபிரானுக்கு)மயிர்கள் சிலிர்த்தன; கண்ணீர் போந்து பொழிந்தன - கண்ணீர் வழிந்து பெருகின; மார்பும் தோளும் பொங்கி துடித்தன - மார்பும் தோள்களும்பூரித்துத்துடித்தன; வியர்வின் துள்ளி தோன்றின - வியர்வையின் துளிகள் உண்டாயின; மணிவாய் மடித்தது - அழகிய வாய் இதழ் மடிப்புண்டது; ஆவி வருவது போவது ஆகி மேனி தடித்தது - உயிர்வருவதும் போவதும் ஆகப் பெற்று உடல் பூரித்தது; என்னே ! - என்னவியப்பு; தன்மை தேர்வார் யார் உளர் ? - அப்போது இராமபிரான் அடைந்த நிலைமையை ஆராய்ந்து அறியவல்லார் யாரே உள்ளார் ? (ஒருவரும் இல்லை என்பதாம்,) இராமபிரானுக்குஅப்பொழுது நேர்ந்த மெய்ப்பாடுகளைத் தெரிந்து உணர்த்துவது எம்மனோர்க்கு இயலாது என்றபடி. துள்ளி - துளி. (48) |