அறவணர்த் தொழுத காதை

45




50
புதுக்கோள் யானைமுன் போற்றாது சென்று
மதுக்களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்
ஆங்கது கேட்டோ ரரமிய மேறித்
தாங்காது வீழுந்து தாரைசா வுற்றதூஉம்
கழிபெருந் துன்பங் காவலன் உரைப்ப
பழவினைப் பயன்நீ பரியலென் றெழுந்தேன்
ஆடுங் கூத்தியர் அணியே போல
வேற்றோர் அணியொடு வந்தீ ரோவென
மணிமே கலைமுன் மடக்கொடு யார்திறம்
துணிபொருள் மாதவன் சொல்லியும் அமையான்

45
உரை
54

       புதுக்கோள் யானைமுன் போற்றாது சென்று மதுக்களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்- புதிதாகப் பிடித்துக்கொண்டு வரப்பட்ட யானையின் முன்னே மதுவுண்ட களிப்பினாலாகிய மயக்கத்தால் தன்னைப் பாதுகாவாது சென்ற வீரை இறந்ததுவும், ஆங்கது கேட்டு ஓர் அரமியம் ஏறி தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம் - அவள் இறந்த செய்தி கேட்டு அத் துன்பத்தைத் தாங்காமல் தாரை ஒரு நிலா முற்றத்தில் ஏறி வீழ்ந்து இறப்பினை யடைந்ததுவும் ஆகிய, கழிபெருந் துன்பம் காவலன் உரைப்ப - மிகப் பெருந் துயரத்தை அம் மன்னவன் மொழிய, பழவினைப் பயன் நீ பரியல் என்று எழுந்தேன் - இது முற்செய்த வினையின் பயனாம் நீ வருந்தாதே என வுரைத்து அங்கு நின்றும் எழுந்தேன், ஆடும்கூத்தியர் அணியேபோல வேற்றோர் அணியொடு வந்தீரோ என - அங்ஙனமாகிய நீவிர் நாடக வரங்கில் நடிக்கும் கூத்தியர் கொள்ளுங்கோலம் போல ஈண்டு வேறு வகையான கோலத்துடன் வந்தீரோ என்று, மணிமேகலைமுன் மடக்கொடியார் திறம் துணிபொருள் மாதவன் சொல்லியும் அமையான் - துணியப்பட்ட பொருளினையுடைய பெருந்தவன் மணிமேகலையின் முன்னர் மாதவி சுதமதிகளின் வரலாற்றினைக் கூறியும் அமையாதவனாய் ;

       வீரை மயக்கத்தால் போற்றாது சென்று மாய்ந்ததும், தாரை ஏறி வீழ்ந்து சாவுற்றதும் என்க. ஆகிய துன்பம் என ஒரு சொல் விரித்துரைக்க. கூத்த ரென்பதும் பாடம் ; 1''ஆடுங் கூத்தர்போ லாருயி ரொருவழிக், கூடிய கோலத் தொருங்குநின் றியலாது'' என்பது ஈண்டு அறியற்பாலது. வந்தீரோ என்றது மாதவியையும் சுதமதியையும் நோக்கி. துணிபொருள் மாதவன் - மெய்ப் பொருளைத் துணிந்தவன் என்னும் கருத்தினது.

1 சிலப். 28 : 165-6.