|
ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
|
5
10 |
மாபெரும் பாத்திரம் மடக்கொடிக் கருளிய
ஆபுத் திரன் றிறம் அணியிழை கேளாய்
வார ணாசியோர் மறையோம் பாளன்
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்
பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து
கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சித்
தென் றிசைக் குமரி யாடிய வருவோள்
சூன்முதிர் பருவத்துத் துஞ்சிருள் இயவிடை
ஈன்ற குழவிக் கிரங்கா ளாகித்
தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்கத் |
|
மாபெரும்
பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய - பெருமை மிக்க இவ் வமுதசுரபியை நினக்குக் கொடுத்த,
ஆபுத்திரன் திறம் அணியிழை கேளாய் - ஆபுத்திரன் வரலாற்றை அணியிழாய கேட்பாயாக,
வாரணாசி ஓர் மறை ஓம்பாளன் - காசித் திருப்பதியின் கண்ணுள்ள ஓர் அந்தணனும், ஆரண
உவாத்தி அபஞ்சிகன் என்போன் - மறைகளை ஓதுவிப்போனும் ஆகிய அபஞ்சிகன் என்போனது,
பார்ப்பனி சாலி காப்புக் கடைகழிந்து - மனைவியாகிய சாலி என்பவள் காவலின் எல்லையைக்
கடந்து, கொண்டோன் பிழைத்த தண்டம் அஞ்சி - கொழுநனுக்குப் பிழைபுரிந்தமையாலுண்டாம்
தண்டத்திற்குப் பயந்து, தென்றிசைக் குமரி ஆடிய வருவோள் - தென் திசையிலுள்ள குமரியின்கண்
நீராடும் பொருட்டு வருகின்றவள், சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை - அனைவரும்
உறங்குவதற்குக் காரணமாகிய இருளில் வழியிடத்திலே சூல் முதிர்ந்த பருவத்தில், ஈன்ற
குழவிக்கு இரங்காள் ஆகி - பெற்ற குழந்தைக்குச் சிறிதும் இரங்காதவளாய், தோன்றாத்
துடவையின் இட்டனள் நீங்க - கட்புலனாகாத ஒரு தோட்டத்திலே இட்டுச் செல்ல ;
|
திறம்-வரலாறு.
மறை ஓம்பாளன்-வேதத்தைப் பாதுகாப்பவன். உவாத்தி - உபாத்தியாயன் என்பதன் சிதைவு
; இஃது உவாத்தியன் ; உவாத்தியான் எனவும் வழங்கும். பார்ப்பனி - பார்ப்பான் மனைவி
; மறையோரிற் கணவனைப் பார்ப்பான் என்றும், மனைவியைப் பார்ப்பனியென்றும் கூறுவர்.
காப்பு-நிறைக்காவல். காப்புக் கடை கழிந்து - கற்பொழுக்கம் நீங்கி யென்றபடி. தண்டம்
- மறுமையில் எய்தலாகும் தண்டனை. குமரி-குமரியாறு; கடலுமாம். 1''தொடியோன்
பௌவம்'' என்பதன் உரை காண்க. ஆடிய : செய்யிய வென்னும் வினையெச்சம். முதிர் பருவத்து
- முதிர்ந்த பொழுதிலே. தோன்றா - மறைவிடத்துள்ள. துடவை - தோட்டம் ; 2''தொய்யாது
வித்திய துளர்படு துடவை'' என்பது காண்க.
|
1 சிலப்.
8 : 1. 2 மலைபடு. 122.
|
|