|
உதயகுமரன் அம்பலம் புக்க காதை
|
70
|
மேவிய
பளிங்கின் விருந்திற் பாவையிஃது
ஓவியச் செய்தியென் றொழிவேன் முன்னர்க்
காந்தளஞ் செங்கை தளைபிணி விடாஅ
ஏந்திள வனமுலை இறைநெரித் ததூஉம்
ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த
முத்துக்கூர்த் தன்ன முள்ளெயிற் றமுதம்
அருந்தே மாந்த ஆருயிர் தளிர்ப்ப
விருந்தின் மூரல் அரும்பிய தூஉம் |
|
மேவிய
பளிங்கின் விருந்தின் பாவை இஃது ஓவியச் செய்தி யென்று ஒழிவேன் முன்னர்-பளிக்கறையின்கண்
பொருந்திய புதுமையினை யுடைய பாவையாகிய இது சித்திரச் செய்கை என்று நீங்குவேன் முன்னே,
காந்தளஞ் செங்கை தளைபிணி விடாஅ ஏந்து இளவனமுலை இறைநெரித்ததூஉம் - காந்தள் மலர்
போன்ற சிவந்த கைகள் பிணித்த பிணிப்பு விடாவாய் ஏந்திய இளைய அழகிய முலையை இறையளவு
நெரித்த செய்கையும், ஒத்தொளிர் பவளத்து உள் ஒளி சிறந்த - பவளத்தை யொத்து ஒளிருகின்ற
வாயினுள்ளே ஒளிமிக்க, முத்துக் கூர்த்தன்ன முள்எயிற்று அமுதம் - முத்துக்கள் கூர்மையுற்றாலன்ன
கூரிய பற்களின்கண் ஊறுகின்ற அமுதினை, அருந்த ஏமாந்த ஆருயிர் தளிர்ப்ப-அருந்துதற்கு
ஆசைப்பட்ட அரிய உயிரானது தளிர்க்குமாறு, விருந்தின் மூரல் அரும்பியதூஉம் - புதிய புன்முறுவல்
பூத்ததுவும் ;
முன்பு
மணிமேகலை தன்னைக் கண்டு அஞ்சிப் பளிக்கறையிற் புகுந்த பொழுது அவளை ஓவியமென்று தான்
எண்ணியிருந்தானாக உதயகுமரன் கூறினானென்க. விடா அஃஎதிர்மறை வினையெச்சமுற்று. இறை
- சிறிது. அருந்த என்னும் பெயரெச்சத் தகரம் தொக்கது ; "அருந்தே மாந்த வாருயிர் முதல்வனை"
(14 : 68) என முன்னரும் இங்ஙனம் போந்தது. |
|