விழாவறை காதை




30
வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி
ஏற்றுரி போர்த்த இடியுறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்குங் குருதி வேட்கை
முரசுகடிப் பிடூஉம் முதுகுடிப் பிறந்தோன்
திருவிழை மூதூர் வாழ்கென் றேத்தி
வான மும்மாரி பொழிக மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோ னாகுக


27
உரை
34

       வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்-வச்சிரப்படை நிற்குங் கோயிலின்கணுள்ள விழாமுரசினை, கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றி-கச்சையை யணிந்த யானையின் பிடரினிடம் ஏற்றி, ஏற்று உரி போர்த்த இடியுறு முழக்கிற் கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை-வென்ற நல்லேற்றின் உரியாற் போர்க்கப்பட்டதும் இடியை யொத்த முழக்கத்தை யுடையதும் கூற்றுவனை யழைப்பதும் குருதிப் பலிகொள்ளும் விருப்பத்தினை யுடையதுமாகிய, முரசு கடிப்பிடூஉம் முதுகுடிப் பிறந்தோன் - வீர முரசத்தைக் குறுந்தடிகொண்டு அறைகின்ற தொல்குடிப் பிறந்த வள்ளுவன், திரு விழைமூதூர் வாழ்க என்று ஏத்தி-திருமகளும் விழைகின்ற தொன்னகர் வாழ்க என்று துதித்து, வானம் மும்மாரி பொழிக-மேகம் மாதம் மும்முறை மழை பொழிக, மன்னவன் கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக - அரசன் கோள்கள் நிற்கும் நிலை குலையாமைக்குக் காரணமாகிய செங்கோலை யுடையவனாகுக என வாழ்த்தி ;

கச்சை - அடி வயிற்றிற் கட்டுங் கயிறு. பிடர்த்தலை -

பிடரிடம். வீர முரசிற்கு வென்ற ஏற்றின் தோலை மயிர் கழியாது போர்த்தல் மரபு; இதனை' 1" மண்கொள வரிந்த வைந்துதி மருப்பின், அண்ணனல்லே றிரண்டுடன் மடுத்து, வென்றதன் பச்சை சீவாது போர்த்த, திண்பிணி முரசம்" என்பதனாலறிக. இடியுறு: உறு - உவமவுருபு. இடியுரும் என்னும் பாடத்திற்கு இடியேறு என்க. கூற்றுக்கண் : கண் - அசை. கடிப்பிகூஉம் என்னும் பாடத்திற்கும், இகூஉம்-அறையுமென்னும் பொருட்டாம்; 2" முரசுகடிப் பிகுப்பவும்" என்பது காண்க. என்று வாழ்த்தியென விரித்துரைக்க. மூதூர் வாழ்க மாரிபொழிக கோலோனாகுக என்று ஏத்தி என்னலுமாம்; ஏத்தி-வாழ்த்தி. அரசனது கோல் கோடின் கோட்கள் நிலை திரியும் என்பது, 3"கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும்" 4"கோணிலை திரிந்து...அரசுகோல் கோடி னென்றான்" என்பவற்றாலும் அறியப்படும். முதுகுடிப் பிறந்தோன் முரசம் ஏற்றி ஏத்தி என்றியைக்க.


1 புறம். 287. 2 புறம். 157. 3 மணி. 7: 8. 4 சீவக. 255.