சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை

அதிர்கழல் வேந்தன் அடிபிழைத் தாரை
ஒறுக்குந் தண்டத் துறுசிறைக் கோட்டம்
விருப்பொடும் புகுந்து வெய்துயிர்த்துப் புலம்பி
45 ஆங்குப் பசியுறும் ஆருயிர் மாக்களை
வாங்கு கையகம் வருந்தநின் றூட்டலும்

42
உரை
46

       அதிர்கழல் வேந்தன் அடிபிழைத்தாரை - ஒலிக்கின்ற வீரக் கழலையுடைய மன்னவன் அடிக்குப் பிழைசெய்தாரை, ஒறுக்கும் தண்டத்து உறுசிறைக்கோட்டம் - தண்டிக்கும்டத்தினையுடைய
சிறைச்சாலையின்கண், விருப்பொடும் புகுந்து - விருப்பத்துடன் சென்று, வெய்துயிர்த்துப் புலம்பி - வெய்தாக உயிர்த்து வருந்தி, ஆங்குப் பசியுறும் ஆருயிர் மாக்களை-அவ்விடத்திலே பசியுற்றிருக்கும் அரிய உயிரையுடைய மக்களை, வாங்கு கையகம் வருந்த நின்று ஊட்டலும் - வாங்குகின்ற கையினிடம் வருந்துமாறு நின்று உண்பித்தலும் ;

       இறைவனுக்கும் பெரியார்க்கும் பிழைசெய்தாரைத் திருவடி பிழைத்தாரென்று கூறுதல் மரபு. தண்டத்து உறு - தண்டத்தினைப் பொருந்தி நுகரும். பசியுற்று வெய்துயிர்த்துப் புலம்பும் மாக்களென மாறுக. ஆருயிர் மாக்கள் என்றது, பெறுதற்கரிய மக்களுயிரைப் பெற்றார் இங்ஙனம் வருந்துகின்றனரே யென இரங்கிக் கூறியபடி. ஈண்டுக் கூறியவாறு "வாங்குநர் கையகம் வருத்துத லல்லது" (11 : 49) "வாங்குகை வருந்த மன்னுயி ரோம்பலின்" (14 : 23) "வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்து" (17 : 5) என முன்னர்ப் போந்தமையுங் காண்க.