|
15
|
மாபெருங் கோயில் வாயிலுக் கிசைத்துக்
கோயில் மன்னனைக் குறுகினர் சென்றீங்
குயர்ந்தோங் குச்சி உவாமதி போல
நிவந்தோங்கு வெண்குடை மண்ணகம் நிகற்செய
வேலுங் கோலும் அருட்கண் விழிக்க
தீதின் றுருள்கநீ யேந்திய திகிரி
நினக்கென வரைந்த ஆண்டுக ளெல்லாம்
மனக்கினி தாக வாழிய வேந்தே! |
|
மாபெருங்
கோயில் வாயிலுக்கு இசைத்து-மிக்க பெருமையுடைய மன்னவன் கோயிலையடைந்து வாயில்காப்போருக்குக்
கூறி, கோயின் மன்னனைக் குறுகினர் சென்று ஈங்கு - மாளிகையிலுள்ள வேந்தனுக்கு அண்மையிற்
சென்று, உயர்ந்தோங்கு உச்சி உவாமதிபோல-மிகவுயர்ந்த வானின் நடுவேயுள்ள முழுமதியைப்
போல, நிவந்தோங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய - மிகவுயரிய நினது வெண்கொற்றக்குடை
நிலவுலகிற்குத் தண்ணிய நிழலைத் தருக, வேலும் கோலும் அருள்கண் விழிக்க - நீ ஏந்திய
வேற்படையும் செங்கோலும் அருள்நோக்க முடையவாக, தீது இன்றி உருள்க நீ ஏந்திய திகிரி
- நினது ஆணைச் சக்கரம் இடையூறின்றி இயல்வதாக, நினக்கென வரைந்த ஆண்டுகள் எல்லாம்
மனக்கு இனிதாக வாழிய வேந்தே - நினக்கு என்று பால்வரை தெய்வத்தான் எல்லையிடப்பட்ட
ஆண்டுகளனைத்திலும் மனத்திற்கு இனியவாக வாழ்வாயாக அரசே;
|
வாயில்
- வாயில் காவலரை உணர்த்திற்று. உயர்ந்தோங்கு, நிவந்தோங்கு என்பன ஒரு பொருட்பன்மொழிகள்.
செய, விழிக்க என்பன வியங்கோல்; செயவெனெச்சமாகக் கொண்டு வாழிய வென்பதனோடு முடித்தலுமாம்.
வேலும் கோலும் அருட்கண் விழிக்க என்றமையால், பகை வேறலும் குடியோம்பலும் அருளால் நிகழ
வேண்டுமென்றவாறாயிற்று. ஏந்திய என்பதனை வேல் கோல் என்பவற்றோடு கூட்டுக, மனக்கு
; அத்துச்சாரியை தொக்கது. இனிதாக : பன்மை யொருமை மயக்கம்.
|
மாதவரெல்லாம் இங்ஙனம் அரசர்க்கு ஓம்படை
கூறியபின், அவருளொருவர், உதயகுமரன்
கொலையுண்டமை கேட்டு அரசர்க்குச்செற்றம் நிகழாவண்ணம் முன்பு அப் பதியிலே கழிகாமத்தால்
தீங்கிழைத்துக் கொலையுண்ட இருவர் வரலாறுகளை அரசர்க்குக் கூறுகின்றார்.
|
|