சிறைசெய் காதை

       



145




150

குமரி மூத்தஅக் கொடுங்குழை நல்லாள்
அமர னருளால் அகனக ரிடூஉம்
படுபழி நீங்கிப் பல்லோர் நாப்பண்
கொடிமிடை வீதியில் வருவோள் குழல்மேல்
மருதி பொருட்டான் மடிந்தோன் தம்முன்
கருகிய நெஞ்சினன் காமங் காழ்கொளச்
சுரியிரும் பித்தை சூழ்ந்துபுறந் தாழ்ந்த
விரிபூ மாலை விரும்பினன் வாங்கித்
தொல்லோர் கூறிய மணமீ தாமென
எல்லவிழ் தாரோன் இடுவான் வேண்டி
மாலை வாங்க ஏறிய செங்கை
நீலக் குஞ்சி நீங்கா தாகலின்


143
உரை
154

       குமரிமூத்த அக்கொடுங்குழை நல்லாள்-மணமின்றிக் கன்னியாகவே மூப்புற்ற அவ்விசாகையானவள், அமரன் அருளால் அகல்நகர் இடூஉம் படுபழிநீங்கி-உலக அறவியிற் கந்திற்பாவையிலுள்ள துவதிகனென்னும் தேவன் அருளினாலே ஊரிலுள்ளோர் கூறிய அலரினின்றும் நீங்கி, பல்லோர்நாப்பண்-பலர் நடுவண், கொடிமிடை வீதியில் வருவோள் குழல்மேல்-கொடிகள் செறிந்த வீதியின் வருகின்றவள் கூந்தல்மேல், மருதி பொருட்டால் மடிந்தோன்தம்முன் - முன்னர் மருதியின்பொருட்டு இறந் தோனின் முன்னவனாகிய ஒருவன், கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொள-காமம் வயிரங்கொள்ள இருண்ட உள்ளமுடையவனாய், சுரியிரும்பித்தை சூழ்ந்து புறந்தாழ்ந்த-தனது சுரிந்த கரிய குடுமியைச் சுற்றிப் புறத்தே தாழ்ந்த, விரி பூ மாலை விரும்பினன் வாங்கி-விரிந்த மலர்மாலையை விருப்பத்துடன் எடுத்து, தொல்லோர் கூறிய மணம் ஈது ஆமென - இது பண்டையோர் உரைத்த மணம் ஆகும் என்று, எல் அவிழ் தாரோன் - விளக்க மிக்க மாலையை யணிந்த அவன், இடுவான் வேண்டி - அவட்கு இட விரும்பி, மாலை வாங்க - மாலையை எடுத்தற்குக் கையினைத் தலையி லேற்ற, ஏறிய செங்கை நீலக்குறிஞ்சி நீங்காது ஆகலின்-அங்ஙனம் ஏறிய கையானது கருநிறம் வாய்ந்த குடுமியினின்றும் நீங்கவில்லை யாகலின் ;
  
       குமரிமூத்தல்-மணமின்றித் தமியளாய் மூத்தல். படுபழி-மைத்துனன் முறையால் யாழோர் மணவினைக்கு ஒத்தனளென்று ஊர் கூறிய பொய்ப்பழி. விசாகையின் வரலாற்றைக் கூறிமுடித்தவர் முன்புதெய் வத்தினருளாற் பழிநீங்கி அவள் வீதியில் வருங்கால் நிகழ்ந்ததனைஈண் டெடுத்துக் கூறுகின்றனரென்க. மடிந்தோன் - ககந்தன் சிறுவன். மாலையை விரும்பினன் வாங்கி இடுவான் வேண்டி யென்க. மாலை வாங்க - மாலையை எடுத்தற்குக் கையினை ஏற்ற என வருவித்துரைக்க.