இது நீர் முன்செய் வினையின் பயனால்-இதுநீவிர்
முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனாகும், காசுஇல் பூம்பொழில் கலிங்க நன்னாட்டு
- குற்றமற்ற மலர்சோலைகளையுடைய கலிங்கநாட்டில். தாய மன்னவர் வசுவும் குமரனும்-ஞாதியராகிய
வசு குமரன் என்னும் மன்னர்கள், சிங்கபுரமும் செழுநீர்க் கபிலையும் அங்காள்கின்றோர்-சிங்கபுரத்தையும்
நீர்வளம் மிக்க கபிலைப்பதியையும் ஆண்டு வருகின்றவர்கள், அடல் செருவுறுநாள் - தம்முட்
பகைமையினால் வலிய போரினைச் செய்துவருநாளில், மூவிரு காவதம் முன்னுநர் இன்றி -
ஆறுகாத எல்லை முற்படுவோர் இல்லையாக, யாவரும் வழங்கா இடத்தில் - எவரும் செல்லாத
இடத்தில், பொருள் வேட்டு - பொருளீட்டுதலை விரும்பி, பல்கலன் கொண்டு பலரறியாமல்
எல்வளையாளோடு அரிபுரம் எய்தி-பல அணிகலன்களையும் கொண்டு பலரும் அறியாமல் ஒளிபொருந்திய
வளையினையுடைய மனைவியுடன் சிங்கபுரத்தை யடைந்து, பண்டக்கலம் பகர் சங்கமன் தன்னை
- பொன்னாலாகிய அணிகலன் விற்கின்ற சங்கமனை, கண்டனர் கூற - கண்டோர் உரைக்க,
தையல் - நங்கையே, நின் கணவன் பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் தீத்
தொழிலாளன் - அரசன் தொழில் புரிவோனும் நின் கணவனுமாகிய பரதன் என்னும் கொடுந்
தொழிலையுடையோன், தெற்றெனப் பற்றி-விரைவாகப் பிடித்து, ஒற்றன் இவன் என உரைத்து
மன்னற்கு - அரசனுக்கு இவன் மாற்றானின் ஒற்றனாவான் என மொழிந்து, குற்றமிலோனைக்
கொலைபுரிந்திட்டனன்-குற்றமற்றவனாகிய அவ் வணிகனைக் கொலை செய்தனன்;
|