|
110
|
இலங்கா தீவத்துச் சமனொளி யென்னும்
சிலம்பினை யெய்தி வரங்கொண்டு மீளும்
தரும சாரணர் தங்கிய குணத்தோர்
கருமுகிற் படலத்துக் ககனத் தியங்குவோர்
அரைசற் கேது வவ்வழி நிகழ்தலின்
புரையோர் தாமுமிப் பூம்பொழி லிழிந்து
கற்றலத் திருந்துழிக் காவலன் விரும்பி |
|
இலங்கா
தீவத்துச் சமனொளி என்னும் சிலம்பினை எய்தி வலங்கொண்டு மீளும்-இலங்கைத் தீவின்கணுள்ள
சம்னொளி என்னும் மலையை அடைந்து வலஞ்செய்து வணங்கி மீள்வோராகிய, தரும சாரணர் தங்கிய
குணத்தோர் கருமுகிற் படலத்துக் ககனத்து இயங்குவோர் - தரும சாரணரும் நற்குணங்கள் அமைந்தோரும்
கரிய முகிற் கூட்டங்களையுடைய விசும்பின் வழியே திரிவோரும் ஆகிய, புரையோர் தாமும்
அரைசற்கு ஏது அவ்வழி நிகழ்தலில்-உயர்ந்தோர்கள் அரசனுக்கு நல்வினையாகிய காரணம்
பயனளித்திடற்கு அவ்விடத்தே தோன்றிடலால், இப் பூம்பொழில் இழிந்து - இவ் வழகிய
பொழிலின் கண்ணே இளங்கி, கற்றலத்து இருந்துழி - சிலாதலத்தின்கண் அமர்ந்தபொழுது;
|
புத்த
தருமத்தை ஆங்காங்குச் சென்று பகரும் தொழிலினரைத் தருமசாரணரென்ப. அசோகமன்னனால்
தருமவுரை குறித்துநாடுகட்கு விடுக்கபட்டோரைச் சாரணரென்பவென நாட்டு வரலாறுகூறுகிறது. ஈண்டுக்
கூறப்படும் சாரணர் இலங்கைக்குச் சென்று மீள்வோராவர். கருமுகிற் படலத்துக் ககனத் தியங்குவோரென்றற்குக்
கருமுகிற்கூட்டத்தை ஊர்தியாகக் கொண்டு வானவீதியிற்செல்பவரென்றுமாம். புரை யோர்
- உயர்ந்தோர். உம்மை: சிறப்பு. இதனால் வான்வழியாகச் செல்லும் சாரணர் இப் பொழிற்கண்
இறங்குதற்குக் காரணம் கூறுதலின், "அரசற்கு ஏது அவ்வழி நிகழ்தலின்" என்றார். அவர்கள்
இருந்து அறங்கூறுதற்பொருட்டுக் கற்றலம் எடுத்துவைத்தல் மரபு; இதனைச் சிலா தலம் என்றலும்
வழக்கு; "இலங்கொளிச் சிலாதல மேலிருந் தருளிப், பெருமக னதிசயம் பிறழா வாய்மைத்
தருமஞ் சாற்றும் சாரணர்" (சிலப்.10:161-163) என்று அடிகள் கூறுவது ஒப்புநோக்கத்தக்கது.
|
|