கச்சிமாநகர் புக்க காதை

       


55

பொன்னுரை காண்போர் நன்மனை மறுகும்
பன்மணி பகர்வோர் மன்னிய மறுகும்
மறையோ ரருந்தொழில் குறையா மறுகும்
அரசியன் மறுகு மமைச்சியன் மறுகும்
எனைப்பெருக தொழில்செ யேனேர் மறுகும்
மன்றமும் பொதியிலுஞ் சந்தியுஞ் சதுக்கமும்


54
உரை
59

       பொன்னுரை காண்போர் நன்மனை மறுகும் - பொன்னைக் கட்டளையில் உரைத்து ஓட்டங் கண்டு மாற்றினை அறுதியிடும் வண்ணக்கர் வாழும் நல்ல மாடங்களையுடைய வீதியும், பன்மணி பகர்வோர் மன்னிய மறுகும் - மாணிக்க முதலிய பலவகை மணிகளை விற்கும் வாணிகர் நிலைபெற்ற வீதியும், மறையோர் அருந்தொழில் குறையா மறுகும் - மறையவருடைய முத்தீயோம்பல் முதலிய தொழில் குறைவுபடாத அந்தணர் வீதியும், அரசியன் மறுகும் அமைச்சியன் மறுகும் - அரசப் பெருவீதியும் அமைச்சர் பெருந் தெருவும், எனைப் பெருந் தொழில் செய்யும் ஏனோர் மறுகும் - ஏனைய பெரிய தொழில்களைச் செய்யும் சேனைத் தலைவர் முதலிய ஏனையர் வீதியும், மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் - ஊர்நடுவாய மரத்தடிகளும் அம்பலமும் முச்சந்தியும் நாற் சந்தியும்;

       பொன்னுரை காணும் வண்ணக்கரும் மாணிக்கம் முதலிய விற்கும் மணிவாணிகரும் பெருஞ் செல்வராதலின், அவருறையும் வீதிகளை ஏனை அந்தணர் அரசர் அமைச்சர் முதலாயினர் வீதிகளைச்சேரக்கூறினார். தீயோம்பல் மறையோதல் முதலியன உயர்ந்தனவாகக் கருதப்பட்டமை தோன்ற, "அருந்தொழில்" என்றார். தானைத் தலைமையும், அரசியற் பணியும், நாட்டுக்கு அரணாகும் பிறசெயல்களும் புரவோர் தொழில்களைப் "பெருந்தொழில்" என்றார். மன்றம் முதலிய இடங்கள் சான்றோர் இருந்து அறங் கூறுவதற்கும் கடவுள் வழிபாடு செய்வதற்கும் உரிய வாதலின், இவற்றைப் பிரித்துக் கூறினார். 'சதுக்கமும் சந்தியும் புதுப்பூக் கடம்பும், மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்" (முருகு. 225-6.) முருகனை வழிபடும் திறம் சான்றோராற் குறிப்பிடப்படுமாறு காண்க.