ஊரலருரைத்த காதை






5



நாவ லோங்கிய மாபெருந் தீவினுள்
காவற் றெய்வதந் தேவர்கோற் கெடுத்த
தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்
மணிமே கலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பந் தலைத்தலை மேல்வரச்
சித்திரா பதிதான் சொல்லலுற் றிரங்கித்
தத்தரி நெடுங்கட் டன்மக டோழி
வயந்த மாலையை வருகெனக் கூஉய்ப்
பயங்கெழு மாநக ரலரெடுத் துரையென

1
உரை
9

       நாவல் ஓங்கிய மா பெரும் தீவினுள் காவல் தெய்வதம் தேவர் கோற்கு எடுத்த - நாவல் எனப் பெயர் சிறந்த மிகப் பெரிய தீவினுள்ளே அதன் காவற்றெய்வமாகிய சம்பாபதியால் இந்திரனுக்கு எடுக்கப்பட்ட, தீவகச் சாந்தி செய்தரு நல்நாள் - தீவ சாந்தியாகிய இந்திர விழவினைச் செய்கின்ற நன்னாளில், மணிமேகலையொடு மாதவி வாரா - மணிமேகலையுடன் மாதவியும் வாராமையா லுண்டான, தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர-ஆறுத்துயர் மேன் மேல் மிகாநிற்க, சித்திராபதிதான் செல்லல் உற்று இரங்கி - சித்திராபதி மிகவுந் துன்பமுற்று வருந்தி, தத்துஅரி நெடுங்கண் தன்மகள் தோழி-செவ்வரி படர்ந்து பாய்கின்ற நீண்ட கண்களையுடைய தன் புதல்வி மாதவியின் தோழியாகிய, வயந்த மாலையை வருக எனக் கூய்-வயந்தமாலையை வாவென்று அழைத்து, பயங்கெழு மா நகர் அலர் எடுத்து உரை என-நீ சென்று பயன் சிறந்த பெரிய நகரினுள்ளார் கூறும் அலரை மாதவிக்கு எடுத்துக் கூறு வாயாக என்று உரைப்ப ;

நாவல் மரம் ஓங்கியுள்ளமையால் அப் பெயர்பெற்ற தீவு

என்றுமாம். பெருந் தீவுகளுள் ஒன்றுதலின் இது மாபெருந் தீவு எனப்பட்டது. "நால்வகை மரபின் மாபெருந் தீவும்" (6:195) என்பர் மேலும். பண்டு எடுத்தமையால் தீவகச் சாந்தியெனப் பெயர்பெற்ற இந்திர விழாவைச் செய்யும் இந் நன்னாளில் என விரித்துரைக்க. விழாவிற்கு ஆடல் பாடல் நிகழ்த்த வாராமையால் என்க வாராத்துன்பம் தணியாமல் மேல்வர என்றுமாம். தத்துஅரி-அரி படர்ந்த எனலுமாம்.